ஈரான் துணை அதிபர் ஜாவத் ஜரீப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஈரானில் கடந்த மாதம் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். பின்பு நடைபெற்ற பொது தேர்தலில் மசூத் பெஸஸ்கியான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியான முகமது ஜாவத் ஜரீப் துணை அதிபராக கடந்த இரண்டாம் தேதி நியமிக்கப்பட்டார். அவருக்கு வயது 64. இந்நிலையில் அதிபர் மசூத் பெஸஸ்கியான் புதிய அமைச்சரவை பட்டியலை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். அதில் ஒரு பெண் உட்பட 19 எம்.பிக்கள் இருந்தனர். இந்த பட்டியல் முன்மொழியப்பட்ட சிறிது நேரத்திலேயே துணை அதிபர் முகமது ஜாவத் ஜரீப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அமைச்சரவை பட்டியலில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்திருப்பதாக அங்குள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவருடைய ராஜினாமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இவருடைய திடீர் ராஜினாமா முடிவு ஈரான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.