நேற்று, க்ரிப்டோ வரலாற்றில் முதல் முறையாக பிட்காயின் மதிப்பு $100,000-ஐத் தாண்டியது. அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் கிரிப்டோகரன்சிகளுக்கு சாதகமான கொள்கைகள் கொண்டவர் என்பதால், இந்த ஏற்றம் நிகழ்வதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்த பிட்காயின் மதிப்பு, டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு பிறகு 45% வரை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய கிரிப்டோ மையமாக மாற்றும் திட்டத்துடன் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். அத்துடன், மத்திய அரசின் கிரிப்டோ இருப்புக்களை உருவாக்க, வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் என்ற பெயரில் புதிய கிரிப்டோ வர்த்தக நிறுவனத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார். கிரிப்டோ தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் பால் அட்கின்ஸ், அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (SEC) தலைவராக நியமிக்கப்படுவார் என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், கிரிப்டோ தொடர்பான கொள்கைகளை வகுக்க ஒரு சிறப்பு குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். எலான் மஸ்க் மற்றும் மைக் நோவோக்ராட்ஸ் போன்ற முக்கிய தொழில்முனைவோர், டிரம்பின் இந்த நடவடிக்கைகளால் கிரிப்டோ தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.