பொதுவாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தான்சானியாவில் எலிகளுக்கு பயிற்சி அளித்து, மீட்பு பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெல்ஜியத்தை சேர்ந்த தன்னார்வ நிறுவனம், மோரோக்கோரோ பகுதியில் எலிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
ஆப்பிரிக்க ஜெயண்ட் பவுச் வகையை சார்ந்த எலிகள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதன் வாழ்நாள் 8 முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த எலிகளிடம் சிறப்பான மோப்ப சக்தி உள்ளது. அதனைக் கொண்டு தேடுதல் பயிற்சி அளிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தேடுதல் பணிக்கு ஏற்றவாறு, எலியின் முதுகில், அதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ள உதவும் சாதனம், வீடியோ கேமரா மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் ரேடியோ சாதனம் ஆகியவற்றை பொருத்துகின்றனர். எனவே, ஆபத்தில் இருக்கும் நபரின் இருப்பிடத்திற்கு எலிகளை அனுப்பி, அவர்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.