நவம்பர் 16ம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரியில் நான்கு நாட்களாக பல இடங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக பகுதிகளை கடந்து அரபி கடலை நோக்கி சென்றதால் மழை அளவு குறைந்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கான எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நவ.17ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நவ.16ம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.














