டுவிட்டர் நிறுவனத்தில் பொறியியல் மற்றும் விற்பனை பிரிவில் உள்ள பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில், டுவிட்டரில் 7,500 பணியாளர்களில் 3-ல் இரண்டு பங்கு ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.
எனினும், பணியில் உள்ள ஊழியர்களுடனான கூட்டத்திற்கு பின்பு மஸ்க் கூறும்போது, டுவிட்டர் நிறுவனத்தில் பொறியியல் மற்றும் விற்பனை பிரிவில் உள்ள பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும் என கூறியுள்ளார். இதற்காக தகுதி வாய்ந்த நபர்களை பரிந்துரைக்கும்படியும் ஊழியர்களை அவர் கேட்டு கொண்டுள்ளார். டுவிட்டர் வலைதளத்தில் இந்த பதவிகளுக்கான வாய்ப்பு பற்றிய விளம்பரம் எதுவும் தற்போது வெளியாகவில்லை. எனினும், சிறப்பாக மென்பொருள் தயாரிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என மஸ்க் கூறியுள்ளார்.