மத்திய அரசு, நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நூலகங்களில் இருக்கும் புத்தகங்களை இணையதளம் மூலமாக படிக்கும் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மாணவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் மிகவும் பயனடைவர் என கருதப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய நூலகங்கள் இணைக்கப்படும் பட்சத்தில், பிரதமர் அலுவலக நூலகம், நாடாளுமன்ற நூலகம், குடியரசு தலைவர் மாளிகை நூலகம் உள்ளிட்டவற்றில் இடம்பெற்றுள்ள புத்தகங்களையும் வாசிக்கும் வாய்ப்பு ஏற்படும். ‘ஒரே நாடு ஒரே நூலகம்’ என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, 13 முக்கிய நூலகங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ம் தேதிகளில், நூலகத் திருவிழா நடைபெற உள்ளது. அப்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைப்பார் என கூறப்பட்டுள்ளது.