பதிவு செய்யாமல் இருந்ததால் மெட்டா, ஆல்பாபெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரபல தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
நேபாள அரசு சமூக ஊடக பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சமூக வலைத்தள நிறுவனங்கள் அனைத்தும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உத்தரவிட்டது. பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காலக்கெடு முடிந்தபோதும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் (மெட்டா), யூடியூப் (ஆல்பாபெட்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட், லிங்க்ட்இன் போன்ற முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால், பதிவு செய்யாத 26 சமூக ஊடக செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
இந்தத் தடை வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம், டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன என்றும், அவற்றின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேபாள அரசின் இந்த முடிவுக்கு பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.














