ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வந்தன. அதை தொடர்ந்து, கடந்த மாதம் முதல் அதானி பங்குகள் ஏற்றம் அடைய தொடங்கின. இந்நிலையில், இன்று அதானி குழுமத்தின் பங்குகள் உச்சம் தொட்டுள்ளன. இன்றைய வர்த்தகத்தில், அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகளும் 10 பில்லியன் டாலர்கள் அளவில் சந்தை மதிப்பை கூட்டி உள்ளன. குறிப்பாக, அதானி என்டர்பிரைசஸ் 17% உயர்ந்துள்ளது. மேலும், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்கள் 5%, அதானி வில்மர் 10% மற்றும் அதானி போர்ட்ஸ் 8% உயர்வை பதிவு செய்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் அறிக்கை சுமத்திய குற்றத்தின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க செபிக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் உயர்வது நிறுவனத்தின் மீதான நம்பிக்கை பெறப்பட்டதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.