ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், அதானி குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வந்தன. அதன் பிறகு, கடன்களை திருப்பி செலுத்தி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதானி குழுமம் மீட்டெடுத்தது. எனவே, அதானி குழும பங்குகள் கடந்த இரு மாதங்களாக ஏற்றமடைந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது, இன்றைய வர்த்தக நாளில், அதானி குழும பங்குகள் கிட்டத்தட்ட 10% வரை சரிவை சந்தித்துள்ளன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தை சேர்ந்த 10 நிறுவனங்களும், இன்று 52,000 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனத்தை இழந்துள்ளன.
அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் அமெரிக்க அட்டர்னி அலுவலகம் ஆகியவை, அதானி குழும முதலீட்டாளர்களிடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியான பின்னரே அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளன. அதே வேளையில், முதலீட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்படுவது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அதானி குழுமத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.