மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் குவாரி ஏலம் அறிவிப்பை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி, திருச்சுனை, அய்யாப்பட்டி கிராமங்களில் கிரானைட் குவாரி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் அறிவிப்பை கண்டித்து 31ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தை ரத்து செய்ய கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவர்களுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஏலம் தொடர்பாக அறிக்கை ஒன்றை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் கிரானைட் கற்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்று ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக நலன் கருதி 31.10.2023 அன்று நடைபெற இருந்த பொதுஏலம் ஒரு மாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு 30.11.2023 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்களின் தொடர் எதிர்ப்புகளை தொடர்ந்து ஏல தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கிரானைட் கற்களை பல்வேறு நிறுவனங்கள் வெட்டி எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை கிரானைட் தொடர்பாக ஏற்பட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 10 ஆண்டுகளாக மதுரையில் கிரானைட் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.