திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி வியட்நாம் இடையே விமான சேவை நவம்பர் 2 முதல் தொடங்கப்பட உள்ளது.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் புதிய விமான முனையம் அக்டோபர் மாத இறுதியில் செயல்பாடு கொண்டுவரப்படுகிறது. இதன் பின்பு இன்னும் அதிக விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. அங்கு உள்நாட்டு விமான சேவைகள் பகல் நேரத்திலும், வெளிநாட்டு விமான சேவைகள் இரவு நேரங்களிலும் ஏற்படுத்தும் வகையில் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 2ம் தேதி முதல் திருச்சியில் இருந்து வியட்நாம் நாட்டிற்கு வியட்ஜெட் ஏர்லைன்ஸ் மூலம் விமானம் இயக்கப்பட உள்ளது. இது செவ்வாய்,வியாழன் ஞாயிற்றுக்கிழமைகளில் வியட்னாமிலிருந்து திருச்சிக்கும் திங்கள்,புதன் வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் இருந்து வியட்நாமிற்கும் இயக்கப்படுகிறது. இது வியட்நாம் நேரப்படி இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 11:30 மணிக்கு வந்தடையும். அதேபோல் திருச்சியிலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு அந்நாட்டு நேரப்படி காலை 7:00 மணிக்கு வியட்நாம் சென்றடையும். வியட்நாம் நாட்டிற்கு திருச்சியிலிருந்து விமானம் இயக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். ஏற்கனவே வியட்நாம் நாட்டிற்கு மும்பை,டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி இடங்களில் இருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய விமான சேவை மூலம் தென் மாநில மக்களின் சுற்றுலா பயணம் அதிகரிக்கும், வர்த்தகமும் அதிகரிக்கும் என விமான நிலைய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.