ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் கொச்சின் நகருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புறப்பட இருந்தது. 4 குழந்தைகள், 6 ஊழியர்கள் உட்பட 145 பேருடன், விமானம் கிளம்பத் தயாரான நிலையில் இருந்தது. பின்னர், விமானம் கிளப்பப்பட்டு, ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, விமானத்தின் இரண்டாவது இன்ஜினில் தீ பற்றியதாகக் கூறப்படுகிறது.
தீ பற்றிய உடன், இன்ஜினில் இருந்து பெரும் புகை கிளம்பியதால், விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பாதுகாப்பான முறையில் பயணிகள் அனைவரும் விரைவாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், பயணிகளில் சிலர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனம் மாற்றுப் போக்குவரத்தை ஏற்பாடு செய்தது. இந்த தீ விபத்தை குறித்து உடனடியாக இந்திய விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பொறியாளர் குழுவினர் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.