இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல், கடந்த மாதம் இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியது. இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்த நிலையில், ஒரு மில்லியன் 5ஜி பயனர்களை சம்பாதித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி சேவைகளை முதன் முதலில் வணிகச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது ஏர்டெல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுறி, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வருட இறுதிக்குள், இந்தியாவின் அனைத்து மெட்ரோ பகுதிகள், மற்றும், அடுத்த வருட இறுதிக்குள், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள், ஆகியவற்றில் 5ஜி சேவை முழுமையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு செய்தி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சிம் கார்டுகள், 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து கைபேசிகளிலும், எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி, வாடிக்கையாளர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை பெறலாம். மேலும், அவர்களுக்கான வாடிக்கையாளர்கள் சேவை பிரத்தியேகமாக வழங்கப்படுவதாகவும் நிறுவனத்தின் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5ஜி இணைப்புகள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பின்னர், சேவைகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரந்திப் சேகோன், “5ஜி சேவைகளுக்கான ஆரம்ப நிலையில் தற்போது உள்ளோம். இதற்கிடையில், வாடிக்கையாளர்களின் ஆதரவு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. பெரும்பாலான கைபேசிகளில் 5ஜி சேவை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சில கைப்பேசிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் வரும் வாரங்களில் களையப்படும். 5ஜி மூலம் இந்தியாவை இணைக்கும் நோக்கில் ஏர்டெல் தொடர்ந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.