டெல்லியில் குறிப்பிட்ட வணிக நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் வணிகச் செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள், விடுதிகள், இணையம் வாயிலாக உணவு, மளிகைப் பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை வீட்டிற்கே விநியோகம் செய்யும் நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களை விற்கும் நிறுவனங்கள், போக்குவரத்து சார்ந்த நிறுவனங்கள், பிபிஓக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 314 வணிக நிறுவனங்களுக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் அமேசான் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம், அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை 24 மணி நேரமும் விநியோகம் செய்யும் வசதி ஏற்பட்டுள்ளது. இது நிறுவனத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னரே, தலைநகர் டெல்லியில் 24 மணி நேரச் செயல்பாடுகளுக்காக அமேசான் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் லெப்டினன்ட் ஜெனரல் அலுவலகத்தில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், 24/7 செயல்பாடுகளால், டெல்லியில் வணிகச் செயல்பாடுகளுக்கான எளிமையான சூழல் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், டெல்லியில் செயல்படும் கடைகள் குறித்து, 1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட விதிகளின் பிரிவுகள்: 14, 15 மற்றும் 16 ஆகியவற்றின் விதிவிலக்காக தற்போதைய அறிவிப்பு செயலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக செயல்படுத்த தொழிலாளர் நலத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிப்படையாகவும், விரைவாகவும் இந்த அரசாணையைச் செயலாக்க ஆவன செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.













