சென்னையை சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தால் பாதிப்புகள் நேர்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சொட்டு மருந்தை செலுத்திய 55 பேருக்கு, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் அமெரிக்கா, இதனால் ஒருவர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 12 மாகாணங்களில் இந்த சொட்டு மருந்தால் பலர் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, இந்த மருந்துகளை இறக்குமதி செய்ய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடை விதித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் எஸ்ரிகேர் ஆர்டிபிசியல் டியர்ஸ் என்ற கண் சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலரது கண் பார்வையை பாதிப்படைய செய்த கண் சொட்டு மருந்துகளை குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. மேலும், கண்களில் செயற்கையாக கண்ணீர் வர வைக்கும் சொட்டு மருந்துகளாலும் பாதிப்பு நேர்ந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால், அவற்றையும் திரும்பப் பெறுவதாக அமெரிக்க சுகாதார ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது. இந்தக் கண் சொட்டு மருந்துகள் இந்தியாவில் விற்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக, இந்திய மருந்துகளால் வெளிநாடுகளில் உயிரிழப்புகள் நேர்வது அதிகரித்துள்ளதால் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.