கேரள கவர்னரை பல்கலைக் கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே சமீபகாலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இதையடுத்து, துணைவேந்தர் நியமனங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, இரு மாதங்களுக்கு முன் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் இதுவரை ஆரிப் கையெழுத்து போடவில்லை.
இந்நிலையில், கவர்னர் ஆரிப்பை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர கேரள அரசு தீர்மானித்துள்ளது. முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த அவசர சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடரை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.