தெலுங்கானாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு வாராங்கல் மாவட்டத்தில் உள்ள காகாத்தியா மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வந்த ப்ரீத்தி என்ற மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தெலுங்கானாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா கறுப்புத் துணியால் வாயை மூடியபடி ஹைதராபாதில் நேற்று போராட்டம் நடத்தினார்.
அப்போது போலீசார் அவரை கைது செய்து தடுப்பு காவலில் வைத்தனர். முதலில் பொல்லாராம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட ஷர்மிளா, அதன்பின் 'லோட்டஸ் பான்ட்' என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் சிறை வைக்கப்பட்டார்.