ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரயில் சென்றது. இதில் திடீரென ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரயில் பாலசா ரயிலின் பின் புறத்தில் வேகமாக மோதியதில் பாலசா ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. மேலும் ராயகடா ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் இருந்த பயணிகள் காயம் அடைந்து சத்தம் போட்டனர். இதனை அடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அங்கு மருத்துவ குழு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இன்று காலை வரை பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ரயில் விபத்தின் காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 22 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.