பாலஸ்தீன மக்கள் மீது தீவிர போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலை எதிர்த்து, அமெரிக்காவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. வாஷிங்டன் டிசியில், நேற்று ஏராளமான மக்கள் திரண்டு இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கினர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷமிட்டனர். கன்னான் ரொட்டுண்டா வளாகத்துக்குள்ளே இந்த போராட்டம் நடைபெற்றது. ஆனால், இதற்கான முன் அனுமதி பெறப்படவில்லை என்பதால், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் யூதர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு முன்பாக, வெள்ளை மாளிகைக்கு அருகையும் இது போன்ற போராட்டம் இரு தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டது. அப்போதும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.