ஆப்பிள் நிறுவனம், சில காலமாக சார்ஜர் வழங்காமல் கைபேசிகளை விற்பனை செய்து வருகிறது. இது குறித்து, “மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, புதிதாக வாங்கப்படும் கைப்பேசிகளுக்கு சார்ஜர்கள் வழங்கப்படவில்லை” என்று ஆப்பிள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ஆப்பிள் நிறுவனம் எடுத்த முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இது தொடர்பாக பிரேசில் நாட்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
மேலும், பிரேசில் நாட்டில், சார்ஜர் இல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி, ஐபோன் 13 பிரேசிலில் விற்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு, தடையை மீறியதற்காக, இரண்டு கோடி டாலர் அதாவது 165 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளில், பிரேசில் நாட்டில் விற்கப்பட்ட ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 ஆகியவற்றுக்கு சார்ஜர்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கடந்த இரண்டு வருடத்தில் ஆப்பிள் கைபேசிகளை வாங்கிய பிரேசில் நாட்டினர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர். மேலும், பிரேசில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.