தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நேற்று மாநாடு நடந்தது. அதில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தென் மாவட்டங்களில் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல சிறுதொழிலை முன்னோர்கள் தொடங்கினார்கள். அதோடு அவர்கள் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தொழில் பயிற்சி பெற்று அதை நடத்தி இருக்கிறார்கள். அதன் விளைவாகவே இன்று நமது மண்ணில் பல தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
தீப்பெட்டி தொழிலை பொறுத்தவரை முன்பு உலக அளவில் முன்னணி நாடாக இருந்த சுவீடன் இன்று 15 சதவீதமே ஏற்றுமதி செய்கிறது. ஆனால் உலகில் தீப்பெட்டி ஏற்றுமதியில் 30 சதவீதம் சிவகாசியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது பெருமைக்குரியது. தீப்பெட்டி தொழிலில் சிகரெட் லைட்டர் மூலம் இடையூறு இருப்பது பற்றி வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுக்கிறேன் என்று அவர் கூறினார்.