தமிழகத்தில் முதல் முறையாக, தஞ்சாவூர் அருகே உள்ள மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவில் இரண்டாவது பள்ளி வானியல் ஆய்வகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வகத்தின் மூலம் வானியல் நிகழ்வுகளை மாணவர்கள் பள்ளியிலிருந்து நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கிரகணங்கள் உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளை மாணவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பார்வையிட இங்கு வசதிகள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 3.81 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வானியல் ஆய்வகத்தை தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். விரைவில், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் மற்றொரு வானியல் ஆய்வகம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானியல் ஆய்வகத்தில், அதிக திறன் கொண்ட தொலைநோக்கி, ஆக்குமெண்டெட் ரியாலிட்டி / விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல நவீன உபகரணங்கள் உள்ளன. மேலும், விண்வெளி சார்ந்த மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளின் வரலாறு சார்ந்த புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.