சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் சமையல் செய்ய அனுமதியில்லை என்று சிறப்பு அதிகாரி கூறினார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் மண்டல சீசன் கடந்த மாதம் 27-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜனவரி 11-ந் தேதி முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நிறைவு பெற்ற பின்னரே ஊருக்கு திரும்புவார்கள்.
இந்நிலையில் பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள், சன்னிதானத்திற்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.