வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி நடத்தும் பெரிய பேரணியில் தற்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சி போராட்டம், மக்கள் போராட்டமாக உருவெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 14 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இல்லாத பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோலா பார்க் விளையாட்டு மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களது போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தற்போது பங்கேற்றுள்ளனர். அவர்கள், அந்நாட்டில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். அத்துடன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மக்களின் வாக்குகளை திருடி வெற்றி பெற்றதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டியின் தலைமை அலுவலகத்தை தேசிய பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டுள்ளதால், வங்கதேசத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.














