வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் மற்றும் மோங்லா ஆகிய துறைமுகங்களை, இந்தியா நிரந்தரமாக பயன்படுத்த அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வங்கதேசத்தின் தேசிய வருவாய் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளுக்கு, இந்தியா இந்த துறைமுகங்களை பயன்படுத்துவதற்கான எஸ்.ஓ.பி நடைமுறைகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1965 ல், பாகிஸ்தான் உடன் நடந்த போருக்கு பிறகு, இந்தியா - வங்கதேசம் இடையிலான போக்குவரத்து பாதைகள் முடக்கப்பட்டன. அதன் பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு, அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம், வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கு எளிதாக பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டது. சுங்க நடைமுறை மற்றும் தளவாடங்களை வைப்பதற்கான இடவசதி அமைப்பது போன்ற காரணங்களால், தாமதப்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், திரிபுரா, மிசோரம், மேகாலயா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.