வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டுமென்று அறிவிப்பு.
வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 23-ம் தேதி நள்ளிரவு முதல் 25-ம் தேதி இரவு வரை 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில், ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரூபம் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுடைய கோரிக்கைகளை அரசு கருத தயாராக இல்லை. எனவே, வேலைநிறுத்தம் தவிர எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். வங்கிகள் ஏற்கனவே மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் இயங்காது. மார்ச் 22-ம் தேதி (நான்காம் சனிக்கிழமை) மற்றும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும். இதற்கிடையே, 24, 25-ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெற இருப்பதால், மொத்தம் 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேவையான வங்கி பணிகளை முடித்து விடுமாறு வங்கி சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.