ஏர்டெல் நிறுவனம், 28 நாட்களுக்கான குறைந்தபட்ச சந்தா கட்டணத்தை 57% உயர்த்தி, 155 ரூபாயாக அறிவித்துள்ளது. ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் வாழும் பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்த கட்டண முறை அறிவிக்கப்படும் என தெரிகிறது.
தற்போதைய குறைந்தபட்ச சந்தாவிற்கான பயன்கள் வருமாறு: 155 ரூபாய்க்கு, வரம்பில்லா தொலைபேசி அழைப்புகள், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 குறுஞ்செய்திகள். ஏர்டெல் நிறுவனம் பரிசோதனை அடிப்படையில் இந்த கட்டண உயர்வை கொண்டு வந்துள்ளது எனவும், பெரும்பாலும் 2ஜி பயனர்களுக்கான சந்தா திட்டம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வால், 4ஜி பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு துறையில் கட்டண உயர்வை அறிவிக்கும் முதல் நிறுவனமாக ஏர்டெல் இருக்கிறது. தொடர்ந்து பிற நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவிக்கும் என்று கருதப்படுகிறது.