இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் - ன் கிளை ஒன்று ஹைதராபாத் நகரில் கொண்டாப்பூர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அலுவலர்கள், கட்டிட வளாகத்தில் பணி செய்து கொண்டிருந்த 1500 க்கும் மேற்பட்டோரை உடனடியாக வெளியேற்றினர்.
கட்டிடத்தில் வெடிகுண்டு உள்ளதாக அழைப்பு வந்ததும் மாதாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர், வெடிகுண்டு மீட்பு துறையுடன் விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இறுதியில், தொலைபேசி அழைப்பு போலியானது என தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வந்த முன்னாள் பணியாளர் ஒருவர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார். அவரை பணியில் இருந்து நீக்கியதால் இவ்வாறு செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, அவர் மீது வழக்கு பதியப்படும் என்று கூறப்பட்டுள்ளது.