மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள குண்ட்மாலா சுற்றுலா தலத்தில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில், இந்திராயணி ஆற்றின் மேல் அமைந்த பழைய பாலம் திடீரென இடிந்து விழுந்தது. வார இறுதி தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் பலர் அந்த பாலத்தில் நின்றிருந்தனர். விபத்து நேரத்தில் பலர் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவுகளை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.