அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில் தமிழக அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கல்லூரிகள் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக தொடர்ச்சியாக மருத்துவ கல்லூரி இயக்குநரகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். இதை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் சம்மந்தப்பட்ட கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும் என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.