சந்திரயான் 3 விண்கலம், நிலவைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. தற்போது, 4வது முறையாக அதன் சுற்றுவட்ட பாதை உயரத்தை குறைக்கும் பணி நடைபெற்றது. இன்று காலை நடத்தப்பட்ட இந்தப் பணி வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி பயணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8:30 மணி அளவில், விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. அதன்படி, தற்போதைய நிலையில், நிலவிலிருந்து குறைந்தபட்சம் 153 கிலோமீட்டர், அதிகபட்சம் 163 கிலோமீட்டர் தொலைவில், வட்டப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் பயணித்து வருகிறது. தொடர்ந்து, நாளைய தினம், விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் சாதனம் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிலவை நோக்கி பயணித்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரை இறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.