சென்னை பெருநகர எல்லையானது 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்களுடன் 1,189 சதுர கிமீ.ல் இருந்து 5,904 கிமீ.க்கு விரிவாக்கம் பெறுகிறது.
சென்னை பெருநகர் திட்டப்பகுதி, கடந்த 1975-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி, நகராட்சிகளாக இருந்த ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள், 5 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 179 கிராமங்களை உள்ளடக்கி 1,189 கிமீ பரப்பைக் கொண்டிருந்தது.சென்னை நகரின் மக்கள் அடர்த்தி அதிகரிப்பு, புறநகர் பகுதிகளின் வளர்ச்சி, அடுத்தடுத்த நகரங்களில் தொழில் வளர்ச்சி, அவற்றுடன் சேர்ந்த வீட்டுவசதி வாய்ப்புகள் இவற்றைக் கருத்தில்கொண்டு, சென்னை பெருநகரின் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து, சென்னை பெருநகரப் பகுதி விரிவாக்கம் பொதுமக்கள் ஆலோசனைக்குப்பின் மேற்கொள்ளப்படும் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் மாதம் கருத்து கேட்கப்பட்டு, வரைவு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் உள்ள பகுதிகள் என 5,904 சதுர கிமீ அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர எல்லை 47 ஆண்டுகளுக்குப்பின் விரிவாக்கம் பெறுகிறது. அதன்படி தற்போதுள்ள 1,189 சதுர கி.மீட்டருடன் கூடுதலாக 4,715 சதுர கிமீ பரப்பு இணைந்து 5,904 சதுர கி.மீட்டராக விரிவடைந்துள்ளது. இதில் 1,225 கிராமங்கள் கூடுதலாக சேர்ந்துள்ளன. இதன்மூலம் சென்னை பெருநகர மக்கள் தொகைஅளவு 1.59 கோடியாக இருக்கும். இந்த விரிவாக்கத்தின் மூலம், இந்தியாவில் உள்ள இதர பெரிய நகரங்களான பெங்களூரு பெருநகரம் (8,022 சதுர கிமீ). ஐதராபாத் பெருநகரம் (7,100 சதுர கிமீ) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, சென்னை பெருநகரம் விரிவடைந்த பகுதியாக உள்ளது.