ரூ.1000-க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் கட்டணங்கள், அலுவலக கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இந்நிலையில் ரூ. 1000-க்கு மேல் உள்ள மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆன்லைன் செயல்முறையை எளிதாக்குவதால், மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் உடனடியாக பணம் பெறுவதற்கும், கவுண்டர்களில் தேவையற்ற பணத்தை கையாளுவதை தவிர்க்கவும் உதவும். தமிழ்நாடு மின்சார வாரியம், டிஜிட்டல் முறைகள் மூலம் மொத்த வருவாயில் 74 சதவீதத்தை வசூலித்துள்ளது என்றார்.