சென்னை எழும்பூரில் அரசு மருத்துவமனையின் 200-வது ஆண்டை ஒட்டி கண் மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் 195 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ கட்டிடங்கள், நவீன கருவிகள் மற்றும் மருத்துவ ஊர்திகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு 63.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்டார்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, திருவல்லிக்கேணி , தாம்பரம் அரசு மருத்துவமனை, திருவள்ளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு வென்டிலேட்டர்கள், அல்ட்ரா சவுண்ட் மெஷின்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முதல்வர் வழங்கினார்.
மேலும், பொதுசுகாதார மற்றும் நோய் தடுப்புத்துறையில் 152 களப்பணி உதவியாளர்கள், மின்பணியாளர்கள் என மொத்தம் 237 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணை வழங்கினார்.