சீன எல்லையருகே இந்தியா-அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டு ராணுவ பயிற்சிக்கு எல்லை ஒப்பந்தங்களை மீறும் செயல் என சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
உத்தரகாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்த பகுதியானது சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் 18-வது கூட்டு ராணுவ பயிற்சியான யுத் அப்யாஸ் 2022 என்ற பெயரில் இரு நாடுகளும் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதன்படி, ரஷியாவை சேர்ந்த மி-17வி5 ரக ஹெலிகாப்டரில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து, மிக அதிக உயரத்தில் பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த பயிற்சிக்கு சீனா இன்று தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. அசல் எல்லை கோட்டுக்கு அருகே நடந்து வரும் இந்த போர் பயிற்சியானது, இந்தியா மற்றும் சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தங்களை மீறும் வகையில் உள்ளது என தெரிவித்து உள்ளது. சீனா மற்றும் இந்தியா இடையே கடந்த 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறும் செயல் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இந்த பயிற்சியானது, சீனா மற்றும் இந்தியா இடையேயான பரஸ்பர நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.