சீன செயலிகள் மற்றும் இணையதளங்கள், இந்தியர்களின் தகவல்களை சட்டவிரோதமாக திருடி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பல்வேறு சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சட்டவிரோதமாக இணையத்தில் ஊடுருவி, இந்தியர்களின் தகவல்களை சீனர்கள் திருடி வந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மே மாதத்தில், தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு மேற்கொண்ட கண்காணிப்பு பணிகளின் போது, இது தெரியவந்துள்ளது. நான்கே நாட்களில், சில சீன சைபர் மோசடி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2000 போலி இணையதளங்களை பதிவு செய்து தகவல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்தியாவில் பதிவு செய்யப்படும் இணையதளங்களுக்கு, ‘டாட் இன்’ என்ற டொமைன் அடையாளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சீன சைபர் மோசடி நிறுவனங்கள், ‘டாட் இன்’ என்ற அடையாளத்தில் 2000 இணையதளங்களை தொடங்கியுள்ளனர். இதில் பல்வேறு இணையதளங்களை இந்தியர்களிடமிருந்து சட்டவிரோதமாக வாங்கியுள்ளனர். இந்த இணையதளங்கள் மூலம், இந்தியர்களின் தகவல்கள் சட்டவிரோதமாக பகிரப்படுகின்றன. இதன் மூலம், பல்வேறு மோசடிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. எனவே, வெளிநாட்டினர் இந்திய இணையதளங்களை பதிவு செய்வதற்கான விதிமுறைகளில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.