மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 12ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி மற்றும் அம்மன் மாசி வீதிகளில் உலா வருகின்றனர். அதில் எட்டாம் நாளான நாளை காலை 10 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி - அம்மன் தெற்கு ஆவணி மூல வீதி வழியாக மேலமாசி வீதியில் உள்ள கட்டசட்டி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தர உள்ளனர். இதனை தொடர்ந்து இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரை மாநகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை மதுரையில் மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது.