அமைச்சரவையை மாற்றி அமைக்க நிர்ப்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதிதாக தொழில் தொடங்க தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதில் அளிப்பது; சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டிய சட்ட மசோதாக்கள்; சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் அறிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அமைச்சர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''பொது வெளியில் பேசும் போது, எச்சரிக்கையாக இருங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். சட்டப்பேரவையில் உங்களை தூண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசினாலும், பொறுமையாக இருங்கள். மக்கள் பிரச்னைகளை கவனியுங்கள். அமைச்சரவையை மாற்றம் செய்ய, நிர்ப்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்,'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.