டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு, டெல்லியில் பிரமாண்டமான முறையில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் எம்பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்கு, உணவு கூடங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், கட்டுமான பணிகளை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான வினாயக் பை கூறுகையில், நாடாளுமன்றத்தின் முக்கிய கட்டிட பணிகள் முடிந்து விட்டது. தற்போது உள் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிட கலைஞர்களால் நன்றாக சிந்தித்து இப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
அடுத்த குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.