சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இது ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது. இதில் 2310 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பஸ் நிலையத்துடன் மின்சார ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் தாம்பரம் - செங்கல்பட்டு வழிதடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே 20 கோடி ரூபாய் செலவில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் கட்டுமான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதனை ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில் மூன்று நடை மேடைகளுடன் அமைய உள்ளது. இது 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும். இதில் மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலைய கட்டடம் நடைமேடை மேற்கூரைகள் போன்ற பகுதியில் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன. மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ரயில் நிலையத்தில் இணைக்க 450 மீட்டர் நீளத்திற்கு ஆகாய நடைபாலமும் அமைக்கப்படுகிறது.