கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.10,09,511 கோடியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வங்கி வழங்கிய கடன்கள் வாராக் கடன் பிரிவில் சேர்க்கப்பட்ட போதிலும் அதனை கடனாளிகள் திருப்பிச் செலுத்துவதற்கு பொறுப்பானவர்கள் ஆவார்கள். அவர்களிடமிருந்து கடன் நிலுவையை பெறுவதற்கான நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வாராக் கடன் பிரிவில் ரூ.10,09,511 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. இதனை வசூலிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்கிறது.
கடனை திரும்பச் செலுத்தாதவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் அதற்கு தேவையான நீதிமன்ற நடைமுறைகள் மிகவும் சிக்கலானதாக அமைந்துள்ளன.அதுபோன்ற நடைமுறைகளை எளிதாக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.