கடந்த 1959 ஆம் ஆண்டு, திபெத் நாட்டைச் சேர்ந்த பௌத்த மத குரு தலாய்லாமாவுக்கு, ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது. இந்த விருது, மக்கள் சேவை, நல்ல நிர்வாகம், நடைமுறைக்கு உகந்த இலட்சியவாதம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசேவின் பெயரில் பிலிப்பைன்ஸ் அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இது ஆசியாவின் நோபல் விருதாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1959 ஆம் ஆண்டு, தலாய் லாமாவுக்கு விருது அறிவிக்கப்பட்ட போது, அவரால் இந்த விருதை நேரில் பெற இயலவில்லை. இந்நிலையில், 64 ஆண்டுகள் கழித்து, இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில், தலாய்லாமாவின் வீட்டில், அவரது விருது ஒப்படைக்கப்பட்டுள்ளது. விருது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேரில் சென்று விருதை ஒப்படைத்துள்ளனர். இது தலாய் லாமாவுக்கு அறிவிக்கப்பட்ட முதல் சர்வதேச விருது என்ற பெருமையைக் கொண்டதாகும்.