இந்தியா- கனடா இடையே அதிக அளவில் விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
கொரோனா தொற்று காலத்தில் இந்தியா-கனடா இடையேயான விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில், கனடாவில் உள்ள புலம் பெயர்ந்த இந்திய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அப்போது விசா மற்றும் பரஸ்பர சட்ட உதவி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாலி நகரில் நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இந்தியா-கனடா இடையே அதிக அளவில் விமானங்களை இயக்க உதவும் ஒரு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளப்போவதாக அவர் கூறினார். இரு நாடுகளுக்கு இடையே சரக்கு போக்குவரத்து, மக்களின் பயணம், பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.