செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். 24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 22 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விநாடிக்கு 100 கனஅடி மட்டும் திறக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித்துள்ளார். மழை காரணமாக விநாடிக்கு ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வந்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அடையாறு கரையோர பகுதி மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.