பத்திரப்பதிவு, நகராட்சி, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சில ஊழியர்களின் தவறான நடவடிக்கையால் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தவறு செய்பவர்களை கண்டறியவும், அவர்களை கையும், களவுமாக பிடிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி, கைது செய்து வருகிறது. தொடர்ந்து புகார்கள் அதிக அளவில் வந்தன. இதனால் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களிலும், சோதனை சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதாக கருதப்படும் வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்து துறை (ஆர்.டி.ஓ. அலுவலகம்), உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 12 துறைகளின் அலுவலகங்களை குறிவைத்து அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.