கொள்முதல் பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பால் கொள்முதல் விலை உயர்வு, கிராம சங்க பணியாளர்கள் பணி வரன்முறை செய்தல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, அரசு கவனத்தை ஈர்க்க சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் தினசரி உற்பத்தியாகும் 2.57 கோடி லிட்டர் பாலில் ஆவின் நிர்வாகம் 40 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே கொள்முதல் செய்கிறது.
கர்நாடகாவில் பால் உற்பத்தியாளர்களுக்கு, அம்மாநில அரசு லிட்டருக்கு 6 ரூபாய் மானியம் வழங்குவதுபோல் தமிழக அரசும் வழங்க வேண்டும். அத்துடன், பசும்பால், எருமைப்பால் கொள்முதல் லிட்டருக்கு 10 ரூபாய் விலை உயர்த்த வேண்டும்.
உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை, ஆவின் நிர்வாகம் லிட்டர் 48 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதுவே, தனியார் நிறுவனம் 70 ரூபாய்க்கு விற்பதால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, தனியார் விலையை கட்டுப்படுத்தி நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் விலைக்கு தனியார் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்ற வரும் 26 ஆம் தேதிக்குள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் திட்டமிட்டபடி வரும், 28 ஆம் தேதி முதல் பால் நிறுத்த தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறினார்.