தமிழக கடலோர பகுதிகளில் தீவிரவாதிகளில் ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.
நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் சாகர் கவாச் என்ற பெயரில் ஒத்திகை ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு கடல் வழியாக நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒத்திகையானது தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும். பின்னர் அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் புதுவையில் இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 6:00 மணி முதல் தொடங்கியுள்ளது. இது இன்றும், நாளையும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, மாமல்லபுரம் எல்லை, தூத்துக்குடி, நாகை மாவட்டம் ஆகிய இடங்களில் உள்ள கடலோர பகுதிகளில் ஒத்திகை தொடங்கியுள்ளது. இந்த சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் தமிழக போலீசார் 8,500 பேர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்