தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் ஒரே நாளில் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. மேலும் இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 59 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதுக்கோட்டையில் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200 பேருக்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தடுக்க பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் வீடு தோறும் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.