கீழடி அருகே அகரத்தில் 9 அடுக்கு சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பகுதிகளான அகரம் மற்றும் கொந்தகையிலும் அகழாய்வு நடந்து வருகிறது. அகரம் தளத்தில் சரிந்த நிலையில் இரண்டு அடுக்குகள் மட்டுமே கொண்ட சுடுமண் உறைகிணறு ஒன்று வெளிப்பட்டிருந்தது.
அங்கு தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது முதன்முறையாக 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடந்து வருவதால் உறைகிணற்றின் உயரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. கீழடி அகழாய்வில் கடந்த 6ம் கட்ட அகழாய்வில் தமிழகத்திலேயே மிகப்பெரிய 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.














