சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குஜராத் மாநில அரசின் முன்னாள் கூடுதல் செயலாளர் கே.ஜி.வன்சாரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இஸ்ரேல் நாட்டில் கடந்த 1948-ம் ஆண்டில் ஹீப்ரு மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டின் அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது.
இதேபோல உலகின் மிக தொன்மையான மொழியான சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். சமஸ்கிருதத்தின் எழுத்து, உச்சரிப்பு அறிவியல் பூர்வமானவை. சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்வதால் குழந்தைகளின் மனப்பாட திறன் அதிகரிக்கும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பல்வேறு மொழிகளின் தாயாக சமஸ்கிருதம் போற்றப்படுகிறது. சமஸ்கிருத வார்த்தைகள் பல மொழிகளில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் இதுவரை சமஸ்கிருதம் தேசிய மொழியாக அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க அரசமைப்பு சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. எனவே நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தான் பொருத்தமானது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் மனுதாரர் முறையிடலாம். எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.














